Showing posts with label how to manage a business. Show all posts
Showing posts with label how to manage a business. Show all posts

Thursday, August 18, 2011

விஞ்ஞான முறை நிர்வாக இயல்

உலகிலேயே  மிகச் சிறந்த நிர்வாகி யார் என்ற கேள்வியுடன் முதல் பகுதியை முடித்திருந்தோம் 

சிறந்த நிர்வாகி யார் என்று உலகெங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. அவ்ர் உங்கள் வீட்டிலேயே இருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார். அவர்தான்....  

இல்லத்தரசி!

இவர் உங்கள் மனைவியாகவோ, தாயாகவோ இருக்கலாம்.
ஒரு இல்லத்தரசி குடும்பத்தை நிர்வகிக்கும் வழிமுறைகள் நிர்வாக நடைமுறைகளுக்கு இணையானவை என்று சில நிர்வாக இயல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

இது எவ்வாறு என்பதை நிர்வாக இயல் தத்துவங்களை விரிவாக அறிந்துகொண்டபின் நீங்களே உணர்வீர்கள். இப்போதைக்கு, இந்தக் கூற்றுக்கு ஆதராவாக வள்ளுவரின் ஒரு குறளை மட்டும் குறிப்பிடுகிறேன். 

"இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக்கடை."

இல்லத்தரசி சிறப்பான குணங்களைப் பெற்ரிருந்தால், அந்த இல்லத்தில் இல்லாதது எதுவும் இல்லை. மாறாக, இல்லத்தரசியிடம் சிறப்பான குணங்கள் இல்லாவிடில், அந்த இல்லத்தில் எதுவுமே இல்லை' என்பது இந்தக் குறளின் பொருள்.

மாண்பு என்று வள்ளுவர் குறிப்பிட்ட்டது குணங்களை மட்டும் இல்லாமல், திறமைகளையும் குறிக்கும் என்று கொள்ளலாம்.

இதையொட்டித்தான், கவிஞர் கண்ணதாசன்   'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்றார்.

எனவே, உலகின் சிறந்த நிர்வாகி நம் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருப்பதில் பெருமை கொண்டு, மேலே செல்லலாம்.

நிர்வாக இயல் என்பது பல்லாண்டுகளாக அறியப்பட்டும், பின்பற்றப்பட்டும் வரும் ஒரு வழிமுறை. ஆயினும், இது ஒரு முறையான கல்வியாக உருவாக்கப்பட்டது இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான். நிர்வாக அறிவு  என்பது ஒருவருக்கு இயல்பாக அமைந்த திறமை என்ற நிலையிலிருந்து முன்னேறி, நிர்வாக இயலை ஒரு கல்வியாகப் பயிற்றுவித்து, நிர்வாகிகளை உருவாக்க முடியும் என்ற சிந்தனையின் வெளிப்பாடுதான் நிர்வாக இயல் கல்வி.

'விஞ்ஞான முறை நிர்வாக இயல்' என்ற கருத்தை முதலில் உருவாக்கியவர்   ஃபிரெடெரிக் டெய்லர் என்ற அமெரிக்க மெக்கானிகல் இஞ்சினியர். இவர் உருவாக்கிய 'Time Study,' 'Motion Study' போன்ற வழிமுறைகள் தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படுத்த்ப்பட்டன. ஆயினும் ஹென்றி ஃபாயல் என்ற ஃபிரெஞ்ச் இஞ்சினியர்தான் நிர்வாக இயல் தத்துவங்களை வரையறுத்து, நிர்வாக இயல் என்பதை ஒரு பாடமாக வடிவமைத்தார். இதனாலேயே அவர் நவீன  நிர்வாக இயலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.