Enterprise என்ற சொல்லுக்கு ஆழமான பொருள் உண்டு. ஒருவர் துணிந்து ஒரு தொழிலைத் துவக்குவதையே Enterprise என்று குறிப்பிடலாம். ஒரு தொழிலைத் தொடங்கி அதைத் தொடர்ந்து நடத்தும் திறமையை Enterprise என்ற சொல் குறிக்கிறது. நிர்வாக இயலும் இதில் அடங்கும்.
ஒரு சிறிய பெட்டிக்கடையை எடுத்துக் கொண்டால், மேலே குறிப்பிட்ட நான்கு அம்சங்களையும் ஒருவரே பார்த்துக் கொள்கிறார்.
பணம் முதலீடு செய்பவர் அவர்தான். இடமும் அவருடையது அல்லது அவர் ஏற்பாடு செய்தது. வேலை செய்பவரும் (பணியாளர்) அவர்தான். நிர்வாகியும் அவர்தான்.
ஒரு நிர்வாகி என்ற முறையில், என்னென்ன பொருட்களை விற்பது, அவற்றை எங்கே வாங்குவது, என்ன விலைக்கு விற்பது, கடன் கொடுப்பதா வேண்டாமா, லாபத்தை மீண்டும் கடையிலேயே முதலீடு செய்வதா அல்லது வேறுவகையில் பயன்படுத்துவதா போன்ற பல விஷயங்கள் பற்றி அவர் சிந்தித்து முடிவெடுக்கிறார்.
பெரிய தொழிலானால், இந்த நான்கு விஷயங்களையும் வெவ்வேறு நபர்கள் கவனிக்க வேண்டியிருக்கும்.
சற்றே பெரிய மளிகைக்கடை, அல்லது டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரை எடுத்துக் கொண்டால், கடைக்கு முதலாளி என்று ஒருவர் இருப்பார். வேலையாட்கள் இருப்பார்கள். முதலீட்டுக்கான பணத்தைக் கடனாக வழங்கிய வங்கி அல்லது தனிநபர்கள் இருக்கலாம். கடையை நிர்வகிக்க ஒரு மானேஜர் இருக்கக் கூடும்.
சில இடங்களில், தொழில் துவங்குவதற்கான இடத்தை வழங்குவதில் அரசாங்கம் பங்கேற்கிறது. அரசாங்கத்தால் உருவாக்கப்படும் தொழில் பேட்டைகள், வீட்டு வசதி நிறுவனம், மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்றவை கட்டித்தரும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
நிலம், முதலீட்டுத் தொகை, உழைப்பு ஆகியவற்றை வெவ்வேறு நபர்கள் வழங்கினாலும், இவை மூன்றையும் பயன்படுத்தித் தொழிலை வெற்றிகரமாக நடத்தி, இந்த மூன்று தரப்பினர்க்கும் அவரவர்க்கு உண்டான பங்கைக் கொடுப்பதுடன், லாபமும் சம்பாதிக்க வேண்டியது நிர்வாகத்தின் (அதாவது நிர்வாகியின்) பொறுப்பு.
ஒரு நிர்வாகி திறமையாகச் செயல்படாமல், அதனால் தொழில் நசித்துப் போனால் என்ன ஆகும்?
1) தொழிலுக்காக வழங்கப்பட்ட இடம் (அது அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்தாலும், தொழில் நிறுவனத்தால் வாங்கப்பட்டிருந்தாலும்) வீணாகிறது. அந்த இடத்தைப் பயன்படுத்தி வேறு யாராவது தொழில் செய்யக் கூடிய வாய்ப்பும் பறிக்கப் பட்டதாக ஆகிறது.
1) தொழிலுக்காக வழங்கப்பட்ட இடம் (அது அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்தாலும், தொழில் நிறுவனத்தால் வாங்கப்பட்டிருந்தாலும்) வீணாகிறது. அந்த இடத்தைப் பயன்படுத்தி வேறு யாராவது தொழில் செய்யக் கூடிய வாய்ப்பும் பறிக்கப் பட்டதாக ஆகிறது.
2) முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டிலிருந்து பெறக் கூடிய வட்டித் தொகையை இழப்பதுடன், சில சமயங்களில் முதலீட்டையும் இழக்க நேரிடுகிறது.
3) தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள். அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. (அவர்கள் வேறு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்திருந்தால், வேலையை இழந்திருக்க மாட்டார்கள் அல்லவா?)
4) தொழில் லாபகரமாக நடைபெறாததால், நிர்வாகிக்கு இழப்பு ஏற்படுகிறது. தொழிலின் வெற்றி தோல்விக்கான பொறுப்புகளையும் அவர்தான் ஏற்க வேண்டும்.
5) இது தவிர, இந்தத் தொழில் லாபகரமாக நடந்திருந்தால், அந்த லாபத்தை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அதே தொழிலிலோ அல்லது வேறு முதலீடு செய்யப்பட்டு, அதனால் சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் கிடைத்திருக்க வேண்டிய பலன்கள் கிடைக்காமல் போகின்றன.
.
ஒரு தொழிலின் அடிபபடைக் கூறுகளான இடம், முதலீடு, ஆட்கள், நிர்வாகம் ஆகிய நான்கில் நிர்வாகமே மிக முக்கியமானதென்றும், மற்ற மூன்று கூறுகளும் நிர்வாகத்தையே சார்ந்திருக்கின்றன என்றும் இதனால் அறிய முடிகிறது.
அப்படியானால் நிர்வாகம் என்றால் என்ன, நிர்வாகத் திறமையை எல்லோராலும் வளர்த்துக் கொள்ள முடியுமா, அனைவராலும் நிர்வாக இயலைப் பயில முடியுமா போன்ற கேள்விகள் எழுகின்றன.
நிர்வாகம் என்றால் என்ன என்பது குறித்து உலகின் பல நிர்வாக இயல் வல்லுனர்கள் எத்தனையோ நூல்களை இயற்றி உள்ளனர். அவை அனைத்தையும் கற்றாலும், நிர்வாக இயல் என்றால் என்ன என்பதைப் பற்றி வார்த்தைகளால் எடுத்துச் சொல்ல முடியுமா என்பது சந்தேகம்தான்.
நிர்வாகம் சரியாக இருக்கும்போது, நிர்வாகம் என்று ஒன்று இருப்பதே எவரது கவனத்துக்கும் வராது.
நிர்வாகம் சரியாக இல்லாமல் போய் பிரச்னைகள் ஏற்படும்போதுதான் நிர்வாகம் சரியில்லை, நிர்வாகச் சீர்கேடு (mismanagement) என்றெல்லாம் அலசத் தொடங்குகிறோம்.
'அரசாங்கம் என்பது வயிறு மாதிரி. அது ஒழுங்காகச் செயல் படும் வரையில் அப்படி ஒன்று இருப்பதையே நாம் மறந்து விடுவோம்' என்று ஒரு பொன்மொழி இருக்கிறது.
நிர்வாகத்துக்கும் இந்தப் பொன்மொழி பொருந்தும்.
சரி, நிர்வாகம் என்றால் என்ன என்ற கேள்விக்கு வருவோம். மிகவும் சுருக்கமாகச் சொல்வதென்றால், நிர்வாகம் என்பது எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு, முறையாகச் செயல் படுத்துவது என்று கூறலாம்.
ஆங்கிலத்தில் manage என்ற சொல் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. தொலைக்கட்சியில் வரும் ஒரு மொபெட் விளம்பரத்தில், ஒரு கல்லூரி மாணவன் "வீடு, காலேஜ் , லைப்ரரி எல்லாம் 'மானேஜ்' பண்றேன்" என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.
"இந்த வருமானத்தை வைத்துக் கொண்டு எப்படி மானேஜ் பண்ணுவது?" என்று சிலர் அங்கலாய்ப்பதையும் கேட்டிருக்கிறோம்.
எனவே நிர்வாகம் என்பது அம்பானி, முத்தையா, கோயங்கா, டாடா, பிர்லா போன்றவர்கள் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இல்லை.
ஆப்பக்கடை ஆத்தா, அப்பளம் இட்டு விற்கும் ஏழைப்பெண், சைக்கிளில் பாத்திரம் விற்கும் சின்னசாமி, தெருக்கோடியில் நின்று பேல்பூரி விற்கும் விஜய் சோப்ரா என்று எல்லா வகை வியாபாரங்களில் ஈடுபடுவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!
எனது நண்பர் ஒருவர் நிர்வாகத் துறையில் தான் பயின்ற செயல் திட்ட நடைமுறைத் திட்டம் (Project Planning) என்ற பாடத்தைத் தன் மகளின் திருமணத்திற்குப் பயன் படுத்தினார்.
ஒரு செயல் திட்டத்தை (Project) எவ்வாறு திட்டமிட்டு படிப்படியாக நிறைவேற்றுவார்களோ, அதைப் போலவே திருமண வேலைகளையும் திட்டமிட்டுச் சிறப்பாகச் செய்தார்.
விளைவு? செலவு குறைந்தது. வேலைகள் விரைவாக, தடையின்றி நிறைவேறின. திருமணம் அனைவரும் பாராட்டும்படியாகச் சிறப்பாக நடந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக, பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்களுக்கு ஏற்படக் கூடிய 'டென்ஷன்' என்கிற மன அழுத்தம் அவரை அணுகவில்லை.
இப்போது அவர் வேலையை உதறி விட்டுத் திருமண ஏற்பாடுகளைச் செய்து தரும் காண்டிராக்டராகச் சொந்தத் தொழில் செய்கிறார்!
நாம் முதலில் எழுப்பிய மூன்று கேள்விகளில், 'நிர்வாகம் என்றால் என்ன?' என்ற கேள்விக்கு ஒரு அறிமுக விளக்கம் இப்போது உங்களுக்குக் கிடைத்திருக்கும்.
இப்போது இரண்டாவது கேள்விக்கு வருவோம். 'நிர்வாகத் திறமையை எல்லோராலும் கற்றுக் கொள்ளவோ, வளர்த்துக் கொள்ளவோ முடியுமா?'
'முடியாது' என்று உடனே பதில் சொல்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1. பல வெற்றிகரமான தொழிலதிபர்கள் பள்ளிக் கல்வியைக் கூட முடிக்காதவர்கள். இவர்களுக்கு 'நிர்வாக இயல்' என்று ஒரு ,வகைப் படிப்பு இருப்பதே தெரிந்திருக்காது. ஆயினும் இவர்கள் சிறப்பான நிர்வாகிகளாகச் செயலாற்றியிருக்கிறார்கள். (இல்லாவிட்டால், அவர்களால் தொழில் பெரும் வெற்றி அடைந்திருக்க முடியாதல்லவா?)
எனவே, நிர்வாகத் திறமை என்பது சிலருக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. 'கவிஞன் பிறக்கிறான், உருவாக்கப் படுவதில்லை' என்று ஒரு கூற்று உண்டு. அதேபோல், 'நிர்வாகிகள் பிறக்கிறார்கள், உருவாக்கப் படுவதில்லை' என்பது ஒரு சாராரின் கருத்து.
நிர்வாக இயலில் பட்டம் பெற்ற சிலரை விட, அதிகம் படிக்காத சில நிர்வாகிகள் வெற்றிகரமாகச் செயல்படுவதை இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
2. இதை மறுக்கும் இன்னொரு சாரார், 'சிலருக்கு இயல்பாகவே நிர்வாகத் திறமை இருக்கலாம். ஆனால் இந்தத் திறமையை, பயிற்சி மூலம் யாருக்கு வேண்டுமானாலும் அளிக்க முடியும்' என்பது இவர்கள் வாதம்.
நிர்வாக இயல் படித்து, தாங்கள் படித்தவற்றைப் பயன்படுத்திச் சிறப்பான சாதனைகள் புரிந்தவர்களைத் தங்கள் கருத்துக்குச் சான்றாக இவர்கள் காட்டுகிறார்கள்.
ஆனால், இதில் ஒரு முரண்பாடு உள்ளது. நிர்வாகக் கல்வி அளிக்கும் நிறுவனங்கள், இந்தப் படிப்பில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. இந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும்தான் இந்தப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
இதை வெறும் இடங்களைப் பூர்த்தி செய்யும்முறை என்று சொல்ல முடியாது. ஏனெனில் அஞ்சல் மூலம் நிர்வாக இயலைப் பயிற்றுவிக்கும் சில புகழ் பெற்ற நிறுவனங்களும் இந்த நுழைவுத் தேர்வு முறையைப் பயன்படுத்துகின்றன.
இதை இவர்கள் aptitude test என்று அழைக்கிறார்கள். அதாவது நிர்வாக இயல் படிப்பை மேற்கொள்ளும் அறிவுத் திறன் அல்லது மனத்திறன் யாருக்கெல்லாம் இருக்கிறது என்று இந்தக் கல்வி நிறுவனங்கள் சோதித்துப் பார்த்து, சோதனையில் யாரெல்லாம் தேறுகிறார்களோ, அவர்களை மட்டும்தான் நிர்வாக இயல் படிப்பில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இதன் பொருள், 'நிர்வாக இயல் பயிலும் தகுதி எல்லோருக்கும் இல்லை, சிலருக்குமட்டும்தான் இருக்கிறது' என்பதுதானே?
இந்தக் கருத்தில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஏனெனில், நிர்வாக இயல் கல்வியில் பல உயர்நிலைத் தத்துவங்களும், கணிதம், பொருளாதாரம் போன்ற பாடங்களும் இடம் பெறுகின்றன. இவற்றில் பலவற்றைப் புரிந்து கொள்வது சிலருக்கு மட்டுமே இயலக் கூடும்.
அதனால், இதுபோன்ற உயர்நிலைத் தத்துவங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய அறிவுத்திறனும், சிந்தனைத்திறனும் உள்ளவர்கள் மட்டுமே நிர்வாக இயல் படிப்புகளில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆனால் நிர்வாக இயலில், எளிய, நடைமுறையில் அனைவரும் பின்பற்றக் கூடிய பல தத்துவங்கள் இருக்கின்றன. இவற்றை அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இவற்றைத் தங்கள் வாழ்க்கையிலும், தொழிலிலும், வேலையிலும் பயன்படுத்தி ஏற்றமடையலாம்.
இந்த வலைப்பதிவின் நோக்கம் அனைவருக்கும் பயன்படக் கூடிய, நடைமுறைக்கு எளிதான சில நிர்வாக இயல் கருத்துகளை விளக்குவதுதான்.
சரி. இனி, நுழைவாயிலைக் கடந்து நிர்வாக இயல் என்ற அற்புதமான கட்டடத்துக்குள் நுழையலாமா? அதற்கு முன் ஒரு கேள்வி. .உலகிலேயே மிகச் சிறந்த நிர்வாகி யார்?
இந்தக்கேள்விக்கான பதில் அடுத்த பகுதியில்.
No comments:
Post a Comment